சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட தற்போதைய இடைக்கால பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி வேட்பு மனு தாக்கல்  செய்தார்.

முன்னாள் முதல்வர்  ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து உடைந்த அதிமுக பின்னர்  ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் புதிதாக உருவாக்கப்பட்டு, ஒபிஎஸ் இபிஎஸ். இணைந்து, கடந்த கால அதிமுக ஆட்சியை நிறைவு செய்தது. அதைத் தொடர்ந்து 2021ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தோல்வியை தழுவிய நிலையில், மீண்டும் கட்சி தலைமை பதவிக்கு மோதல் ஏற்பட்டது.

இந்த நிலையில், கடந்த 2022ம் ஆண்டு  ஜூலை மாதம் 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுதொடர்பாக பல வழக்குகள் நடைபெற்றாலும், உச்சநீதிமன்றம், இந்த தேர்தலுக்கும், எடப்பாடியின் பதவிக்கும் பச்சைக்கொடி காட்டியது.

இந்த நிலையில், அதிமுக  பொதுச்செயலாளரை  கட்சி விதிப்படி தேர்ந்தெடுக்கும் தேர்தல் மார்ச்  26-ந்தேதி தேர்தல் நடைபெறும் என அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்றும், நாளையும் நடக்கிறது. வேட்புமனு பரிசீலனை 20-ந்தேதி நடக்கிறது. வேட்புமனுக்களை 21-ந்தேதி மாலை 3 மணி வரை திரும்ப பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில், முதல் ஆளாக எடப்பாடி பழனிச்சாமி தனது அதரவலாளர்களுடன் பொதுச்செயலாளர் பதவிக்கு வேட்பு மனுவை  தாக்கல் செய்தார். தேர்தல் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இபிஎஸ் வேட்புமனுவை 10 மாவட்டச் செயலாளர்கள் 10 மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிந்துள்ளதாகவும், 10 மாவட்டச் செயலாளர்கள் வழிமொழிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து யாரும் வேட்பு மனுவை தாக்கல் செய்ய வாய்ப்பு இல்லை என்பதால் அவர் போட்டியிடின்றி தேர்வாக வாய்ப்பு உள்ளது.

இதற்கிடையே, பொதுச்செயலாளர் தேர்தலை தடுத்து நிறுத்துவது சட்ட ரீதியான வாய்ப்புகளை ஓபிஎஸ் தரப்பு ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. சென்னை ஐகோர்ட்டில் கூடுதல் மனுவை தாக்கல் செய்யலாம் எனவும் கூறப்படுகிறது.