சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிடப்பட்ட நிலையில், இதுதொடர்பான வழக்கை நாளை விசாரிக்க தலைமை நீதிபதி அனுமதி வழங்கி உள்ளார்.  அதன்படி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ்பாபு முன்பு நாளை காலை விசாரணை நடைபெற உள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் குறித்து எடப்பாடி தரப்பு அவசரம் அவசரம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தற்போது அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக உள்ளார். இவர் நிரந்தர பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படுவதற்காக அதிமுகவில் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தப்படுகிறது.

இதுதொடர்பான அறிவிப்பை நேற்று வெளியிட்ட நிலையில், இன்றே வேட்பு மனு தாக்கல் தொடங்கி உள்ளது. வேட்புமனுத்தாக்கல் செய்ய இரண்டு நாள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மார்ச் 26 ஆம் தேதி அன்று காலை 8 மணி முதல் மாலை 6:00 மணி வரைக்கும் பொதுச் செயலாளர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மார்ச் 27ஆம் தேதி திங்கட்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.  இது அதிமுக தொண்டர் களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில்,  இன்று காலை 10 மணிக்கு  அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி இன்று வேட்பு மனுவை  அதிமுக பொதுச்செய லாளர் தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரிடம் தாக்கல் செய்தார்.

இது ஓபிஎஸ் தரப்புக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் மனோஜ் பாண்டியன், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி யிடம் முறையிட்டார். அதைத்தொடர்ந்து,  அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுமீதான விசாரணை,  விடுமுறை தினமான நாளை அவசர வழக்காக விசாரிங்ககப்படும் என தலைமை நீதிபதி அறிவித்த உள்ளார்.  இந்த மனுவை நாளை நீதிபதி குமரேஷ் பாபு விசாரிக்க உள்ளார். இதில் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.