டெல்லி: எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு வழக்கை ஒத்தி வைக்கக்கோரி ஓபிஎஸ் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்ததுடன்,  திட்டமிட்டபடி டிசம்பர் 6ஆம் தேதி விசாரணை நடைபெறும் என அறிவித்து உள்ளது.

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தீவிரமடைந்த நிலையில், கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டது. இதில் கட்சியின் செயற்குழு, பொதுக்குழுவினரின் 99 சதவிகித ஆதரவுடன் அதிமுகவின்  இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  வழக்கை விசாரித்து, தீர்ப்பு வழங்கிய தனி நீதிபதி ஜெயச்சந்திரன் ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லாது. ஜூன் 23-ம் தேதிக்கு முந்தைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதில் எடப்பாடிக்கு ஆதரவாக தீர்ப்பு கிடைத்தது.  தனி நீதிபதி ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு செல்லாது. எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் இணைந்து செயல்பட முடியாத நிலையில் இருவரும் சேர்ந்து தான் கூட்டங்களை கூட்ட வேண்டும் என உத்தரவிட முடியாது. இரு தலைவர்களும் இணைந்து தான் கூட்டங்களை கூட்டவேண்டும் என்ற உத்தரவு கட்சியின் செயல்பாட்டை முடக்கிவிடும் என தீர்ப்பு அளித்தனர்.

இதையடுத்து, உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்துவும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக, தங்களை கேட்காமல் எந்த உதத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என  எடப்பாடி பழனிசாமி தரப்பில்  கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இந்த வழக்கை  உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கெய்ஷனா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இந்த நிலையில் ல் செப்டம்பர் 30ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, இடைக்கால பொதுச்செயலாளராக இருக்கும்போதே பொதுச்செயலாளர் தேர்தலுக்கு அவசரம் என்ன? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர் இதனையடுத்து, அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த அதிரடியாக தடை விதிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின்போது, இந்த மனுவுக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் எனக்கு ஆதரவாக உள்ளனர். ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு அற்பமானது. தொண்டர்களின் விருப்பதத்திற்கு ஏற்ப, கட்சியின் நலனைக்கருதியே ஒற்றை தலைமை என்பது உருவாக்கப்பட்டது. கட்சியின் பொதுக்குழுவுக்கே அனைத்து அதிகாரமும் உள்ளது. ஆகையால், அதன் முடிவே இறுதியானது. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,  அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  மேலும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி நவம்பர் 30-ஆம் தேதி விசாரணை நடைபெறாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு நிச்சயம் டிசம்பர் 6ம் தேதி விசாரணைக்கு எடுக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதன்படி, டிசம்பர் 6-ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வரும்போது ஓபிஎஸ் மற்றும் இபிஸ் ஆகிய இருதரப்பு வாதங்களை கூற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதனிடையே, அதிமுக பொதுக்குழு வழக்கை டிசம்பர் 13-க்கு ஒத்திவைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி தரப்பு டிசம்பர் 6ந்தேதிக்கு முன்னதாகவே விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இருவரின் கோரிக்கையையும் நிராகரித்த நீதிபதிகள், டிசம்பர் 6ந்தேதி விசாரணை நடைபெறும் என உத்தரவிட்டனர்.