சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கில், எடப்பாடி பழனிச்சாமி பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை நீதிமன்றம் ஏப்ரல் மாதத்துக்கு ஒத்தி வைத்துள்ளது.

அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மோதல் உச்சத்திற்கு சென்ற நிலையில், கடந்த மாதம் பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதையடுத்து, எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்த கடந்தாண்டு ஜூலை 11-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் மனோஜ்பாண்டியன் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கை  தள்ளுபடி செய்ய வேண்டும் என்று  எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அவரது மனுவில், அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் அமலுக்கு வந்து 8 மாதங்களுக்கு பின் மனோஜ் பாண்டியன் தாக்கல் செய்துள்ளள வழக்கு செல்லாததாகிவிட்டது என்றும், இதனால் மனோஜ் பாண்டியன் தாக்கல் செய்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் வைத்திலிங்கம்,ஜே.சி.டி. பிரபாகரும் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.  இந்த மனு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.