டில்லி:

லைநகர் டில்லியில் ஆம்ஆத்மி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி வகித்து வருகிறார்.

டில்லியில் மாநில கவர்னருக்கும், ஆம்ஆத்மி அரசுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில், கெஜ்ரிவால் வீட்டில்,  ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் தன்னை தாக்கியதாக  தலைமைச் செயலாளர் புகார் அளித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டில்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு தலைமை செயலாளராக இருப்பவர் அன்ஷு பிரகாஷ். இவர் 1986ம் ஆண்டு பேட்ஜ் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இவர் ஏற்கனவே, அருணாச்சல பிரதேசம், கோவா, மிசோரம் போன்ற யூனியன் பிரதேசங்களில் பணியாற்றி வந்துள்ளார். அதன் காரணமாக பாஜக மத்திய அரசு அவரை டில்லிக்கு மாற்றியது.

இந்நிலையில் தலைமை செயலாளர் கவர்னரின் கைப்பாவையாக செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வந்தது.

இந்நிலையில், அரசாங்கத்தின் விளம்பர செலவு அதிகரித்து வருவது தொடர்பாக நேற்று இரவு முதல்-மந்திரி கெஜ்ரிவால் வீட்டில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  அதில் கலந்துகொண்ட தலைமை செயலாளருக்கும் ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து இரு எம்எல்ஏக்கள் தலைமை செயலாளர் அன்ஷூ பிரகாசை கெஜ்ரிவால் முன்னிலையில் பிரகாஷ் ஜர்வால் மற்றும் அமானத்துல்லா கான்  தாக்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அங்கிருந்து சென்ற தலைமை செயலாளர். நேராக கவர்னர் மாளிகை சென்றார். அங்கு கவர்னர் அனில் பைஜாலிடம் புகார் கொடுத்துள்ளார். தன்னை தாக்கிய எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இது தலைநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், தலைமை செயலாளரின் புகாருக்கு ஆம் ஆத்மி கட்சி மறுப்பு தெரிவித்து உள்ளது. மேலும்,  ‘எம்.எல்.ஏ.க்களின் கேள்விகளுக்கு தலைமைச் செயலாளர் பதில் அளிக்க மறுத்ததுடன், ஆளுநர் கேட்டால் மட்டுமே பதில் அளிப்பேன் என்று கூறினார். இதைத்தொடர்ந்து எம்.எல்.ஏ.க்களை கெட்ட வார்த்தைகளால் திட்டினார். பா.ஜ.க.வின் தூண்டுதலின் பேரில் எங்கள் மீது குற்றம்சாட்டுகிறார்’ என  கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தலைமை செயலாளர் மீது ஆம்ஆத்மி கட்சியை சேர்ந்த எம்எல்ஏ அஜத் தத் என்பவர் புகார் கூறி உள்ளார்.

தலைமை செயலாளர் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் டில்லி அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.