மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கானுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. ஏற்கனவே பாலிவுட் நடிகர்கள்  அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் ஆகியோருக்கு முதன்முதலாக கொரோனா உறுதி செய்யப்பட்டது.  அந்த வரிசையில் தற்போது நடிகர் ஆமீர்கான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.  ஆமீர்கான் கடந்த வாரம்  தன்னுடைய 56-வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது சமூகவலைதளங்களில் இருந்து வெளியேறுவதாக அவர் அறிவித்தார். இது தேசியளவில் பரபரப்பை கிளப்பியது. இந்த நிலையில் அமீர்கானுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, அமீர்கானின் செய்தித்தொடர்பாளர் இ வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமீர்கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை நடைமுறைகளை பின்பற்றி வருகிறார். அவர் தற்போது நலமுடன் உள்ளார். சமீபத்தில் அமீர்கானை சந்தித்தவர்கள், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் அமீர்கான், கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து விரைவில் குணமடைய ரசிகர்களும், திரைத்துறையினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.