நாடு முழுவதும் பண பரிமாற்ற அடையாள நம்பராக ஆதார் நம்பரை மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இன்னும் சில வாரங்களில் ‘பிம்’(பிஹெச்ஐஎம்) ஆப் மூலம் 12 இலக்க ஆதார் நம்பரை பயன்படுத்தி, பணம் அனுப்பவும், பெறவும் வழிவகை செய்ய இருக்கிறது.

இது நடைமுறைக்கு வந்தால் இந்த ‘பிம்’ ஆப்பில் விரல் ரேகையை பதிவு செய்து தான் பண பரிமாற்றம் செய்ய வேண்டியது இருக்காது. 12 இலக்க ஆதார் எண்ணை பதிவு செய்தே பணம் அனுப்பலாம், பெறலாம்.


வங்கிக் கணக்கு உள்ளவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் ஆதார் நம்பரை வங்கிக் கணக்குடன் இணைத்துள்ளதால் இதை எளிதாக நடைமுறைக்கு வருவது சாத்தியம் என்று அரசு கருதுகிறது.

இதற்காக ஆதார் திட்டத்தை செயல்படுத்தும் ‘உதய்’ (யுஐடிஏஐ) தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவுடன் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்த தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இது குறித்து உதய் அமைப்பின் சிஇஓ அஜெய் பூஷான் பாண்டே கூறியதாவது:

நாட்டில் 38 கோடி பேர் ஆதார் நம்பரை வங்கிக் கணக்குடன் இணைத்துள்ளனர். இவர்களால் யு.பி.ஐ. செயலி மூலம் ஆதார் எண் உதவியோடு நேரடியாக பணத்தை அனுப்பவும், பெறவும் முடியும்.

அரசு சமீபத்தில் அறிமுகம் செய்த பிம் ஆப்பிலும் பணத்தை பெறவும், அனுப்பவும் முடியும். ஆனால் அதற்கு தனியாக யு.பி.ஐ. பின் நம்பரை உருவாக்கி அதன் மூலம் அனுப்ப முடியும். ஆதார் எண்ணை பிம் செயலியுடன் இணைக்கும்போது தனியாக பின் நம்பர் தேவைப்படாது. வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட 12 இலக்க ஆதார் நம்பரை பயன்படுத்தியே பணத்தை அனுப்பலாம், பெறலாம்.
தற்போது மாதம் ஒன்றுக்கு 2 கோடி பேர் ஆதார் நம்பரை வங்கிக் கணக்கில் பதிவு செய்து வருகின்றனர். அடுத்த சில மாதங்களில் மக்கள் தொகையில் பாதிக்கு மேல் வங்கிக் கணக்கோடு ஆதார் எண்ணை இணைத்துவிடுவார்கள். அப்போது ஆதார் நம்பரை பயன்படுத்தி பணத்தை அனுப்பும் முறை எளிதாகும்.
வர்த்தகர்களுக்கான பிம் செயலியில் வாடிக்கையாளர்கள் தங்களின் விரல் ரேகையை பதிவு செய்து பணத்தை பெறும் முறையும் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆந்திரா ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கும் பயனாளிகள் இந்த ஆதார் விரல்ரேகை பதிவு செய்து பண பரிமாற்றம் செய்யும் முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.