சென்னை: ரேசன் அட்டைதாரர்களிடம் ஆதார் எண் கேட்கக்கூடாது என  ரேசன் கடைகளுக்கு உணவுபொருள் வழங்கல் துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. நேற்று,  ரேசன் அட்டை தாரர்களிடம் ஆதார் எண்ணை இணைக்க சொன்னால் மட்டும் போதும்- அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்ட நிலையில், இன்று ரேசன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களிடம் ஆதார் எண் கேட்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வருகிற பொங்கல் பண்டிகைக்காக இந்த முறை ரேசன் கடைகளில் பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள ரேசன் அட்டைதாரர்களில் 14.86 லட்சம் ரேசன் அட்டைதாரர்களுக்கு வங்கிக் கணக்கு எதுவும் இல்லை. பலர் வங்கிக் கணக்கு வைத்திருந்தாலும், ஆதார் நம்பரை இணைக்காததால், வங்கிக் கணக்கு இல்லை என்றே தரவுகள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அ.சண்முக சுந்தரம், அனைத்து மண்டல இணைப் பதிவாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நேற்று  அனுப்பிய சுற்றறிக்கையில், தமிழகம் முழுவதும் உள்ள ரேசன் அட்டைதாரர்களில் 14.86 லட்சம் ரேசன் அட்டைதாரர்களுக்கு வங்கிக் கணக்கு எதுவும் இல்லை. இவர்களில் பலர் வங்கிக் கணக்கு வைத்திருந்தாலும், ஆதார் நம்பரை இணைக்காததால், வங்கிக் கணக்கு இல்லை என்றே தரவுகள் தெரிவிக்கின்றன. இவர்களில் யாராவது ஏற்கனவே வங்கிக் கணக்கு வைத்திருந்தால் அதன் விவரங்களை பெறவும், கணக்கு இல்லாதவர்களுக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் ‘ஜீரோ பாலன்ஸ்’ (பணமில்லாத) வங்கிக் கணக்கை தொடங்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை பின்பற்றுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள், சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்படுகின்றன.

வங்கிக் கணக்கு எண் இல்லாத ரேசன் அட்டைதாரர்களுக்கு விவரக் குறிப்புகள் அடங்கிய தாளுடன் சேர்த்து, அருகில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக் கிளையை நேரில் அணுகி ‘ஜீரோ பாலன்ஸ்’ கணக்கை தொடங்க வேண்டும்.

அந்த விபரங்கள் அடங்கிய படிவத்தை பூர்த்தி செய்து 4 நாட்களுக்குள் அந்தந்த ரேசன் கடைகளில் ஒப்படைக்க வேண்டும்.

ஏற்கனவே வங்கி கணக்கு எண் வைத்திருந்தால், சம்பந்தப்பட்ட ரேசன் கடைப் பணியாளர் அவர்களது பகுதியின் கீழ் வரும் ரேசன் அட்டைதாரர்களின் வீடுகளுக்கு நேரிடையாக சென்று, அவர்களின் வங்கி கணக்கு எண், பாஸ் புத்தகத்தின் முதல் பக்கத்தின் நகல் மற்றும் அவற்றுடன் ரேசன் அட்டை நம்பர், குடும்பத் தலைவர் பெயர் ஆகியவற்றை குறிப்பிட்டு வழங்கும்படி அவர்களை அறிவுறுத்தி, அந்தத் தகவல்களை கேட்டுப் பெறவேண்டும்.

30.11.2022 அன்று வெளியிடப்பட்ட கடிதத்தில் கீழ்கண்ட முக்கியமான திருத்தம் வெளியிடப்படுகிறது. ஏற்கனவே வங்கி கணக்கு எண் வைத்துள்ள குடும்ப அட்டைதாரர்கள் தொடர்பாக பின்பற்ற வேண்டிய நடைமுறை கீழ்கண்டவாறு திருத்தம் செய்து உத்தரவிடப்படுகிறது.

14,86,582 குடும்ப அட்டைதாரர்களில் ஏற்கனவே வங்கி கணக்கு வைத்துள்ள வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க சொல்லி அறிவுரை வழங்கினால் மட்டுமே போதுமானது. அவர்கள் குறித்து வேறு எந்த தகவல்களையும் பெற வேண்டியது இல்லை.

வங்கி கணக்கு எண் இல்லாதவர்களை பொறுத்தவரையில் நேற்று வெளியிடப்பட்ட நடைமுறையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என கூறப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து இன்று உணவுபொருள் வழங்கல் துறை, ரேசன் கடைகளுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், ரேசன் கடைகளுக்கு வரும் குடும்ப அட்டைதார்களிடம், ஆதார் எண் விவரங்களை எக்காரணம் கொண்டும் கேட்கக்கூடாது என்றும், ஆதார் நகலை நுகர்வோரிடம் பெற்க்கூடாது என்று குறிப்பிட்டுள்ளது.