சென்னை: தமிழக மருத்துவ கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று முடிந்துள்ள நிலையில் 892 எம்.பி.பி.எஸ். இடங்கள் காலியாக இருப்பதாக தெரிவித்த உள்ளது. மத்திய, மாநில அரசுகளின் இடஒதுக்கீடு கொள்கைகளால், இடங்கள் முழுமையாக ஒதுக்கீடு செய்வதில் ஏற்படும் பிரச்சினையால் தமிழக மாணாக்கர்களுக்கு கிடைக்க வாய்ப்பு வீணடிக்கப்படுகிறது.

மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதன்படி, தமிழ்நாட்டில்  அரசு மற்றும் தனியார் சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் 7,378 உள்ளன. இவற்றில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு 15 சதவீதம் போல மீதமுள்ள இடங்கள் தமிழக அரசின் மூலம் நிரப்பப்படுகின்றன. இந்திய மருத்துவ ஆணையத்தின் விதிமுறையை பின்பற்றி தான் அனைத்து மாநிலங்களிலும் கலந்தாய்வு நடத்தப்படுகின்றன. தமிழகத்திலும் அதன்படி கலந்தாய்வு நடந்து வருகிறது.

அதன்படி தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு இரு கட்டங்களாக நடைபெற்று முடிவடைந்துள்ளது. இந்த நிலையில்,   892 எம்.பி.பி.எஸ். இடங்கள் இன்னும் நிரம்பாமல் காலியாக  இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசின் தவறான கொள்கையால் நாடு முழுவதும் 5,931 மருத்துவ இடங்கள் காலியாக உள்ளன.  அதாவது, 4,299 எம்.பி.பி.எஸ். இடங்களும் 1,280 பி.டி.எஸ். இடங்களும் 352 பி.எஸ்.சி. நர்சிங் இடங்களும் காலியாக கிடக்கின்றன. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில்  345, நிகர்நிலை பல்கலைக் கழகங்களில் 318, என்.ஆர்.ஐ. 201, எய்ம்ஸ் மதுரை 24, இ.எஸ்.ஐ.சி-4 என மொத்தம் 892 எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன.  இந்த காலி இடங்கள் அடுத்ததாக நடைபெறும் கலந்தாய்வு மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால், இதுபோன்ற நிலை உருவாவதற்கு காரணம், மத்தியஅரசின் தவறான கொள்கை என விமர்சிக்கப்படுகிறது. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் நிரம்பாமல் காலியாக இருந்து, பின்னர் அந்த இடங்களை தாமதமாக மாநில அரசுகளிடம் சரண்டர் செய்வதால், தமிழக மாணாக்கர்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பு பறிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்கும் வகையில், இந்திய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகளை மாற்றி அமைக்க வேண்டும் கல்வித்துறையினர் மத்தியஅரசை வலியுறுத்தி வருகின்றனர்.