சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா அதிமுகவினரால் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட, கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, அங்கிருந்த  ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து எடப்பாடி பழனிசாமி மரியாதை செய்தார். தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த பிரமாண்டமான கேக் வெட்டினார்.

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில், பொதுக்குழு தொடர்பான வழக்கை விசாரித்த  உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. அதன்படி, எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் என அங்கீகரித்துள்ளது. இதனால் எடப்பாடி தரப்பு சந்தோஷத்தில் மிதக்கின்றனர்.

இந்த நிலையில், இன்று மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் பிறந்தநாளை யொட்டி, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின் முதல்முறையாக அதிமுக அலுவலகம் வருகை தந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து அதிமுக அலவலகத்தில் உள்ள  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலைக்கு அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் உள்பட கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.  முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

இதையடுத்து  ஜெயலலிதா பிறந்த நாள் மலரை வெளியிட்ட இபிஎஸ், அங்கு கூடியிருந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். தொடர்ந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த பிரமாண்டமான ஜெயலலிதா பிறந்தநாள் கேக்கை வெட்டி மகிழ்ந்தனர்.

ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி, மெரினாவில் உள்ள அவரது சமாதி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, அதன்மீது ஐயன் லேடி (iron lady) என எழுதப்பட்டிருந்தது.