சென்னை: நாடு முழுவதும் இன்று 74வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில், டெல்லியில் உள்ள கடமை பாதையில் (ராஜபாதை) குடியரசு தலைவர் திரவுபதி முர்மு முதன்முறையாக தேசிய கொடியை ஏற்றினார். இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியில், முதன்முறையாக எகிப்து அதிபல் அல் சிசி கலந்து கொண்டு சிறப்பித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. 1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, இந்திய நாட்டிற்கென தனி அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு அது நடைமுறைக்கு வந்த நாள் 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26தேதிதான். அந்த நாளே குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மத்திய, மாநில அரசு சார்பில் பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுவதோடு, கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்படும். மத்திய அரசு சார்பில் குடியரசு தின விழா டெல்லியில் உள்ள ராஜபாதையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தாண்டு சென்டிரஸ் விஸ்டா திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட கடமையின் பாதையில் (ராஜபாதை) குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. அங்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடி ஏற்றினார். பொதுவாக காலை. காலை 8 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்ச்சி இந்த ஆண்டு கடும் பனிப்பொழிவு காரணமாக இன்று காலை 10மணி அளவில் தொடங்கியது.

முன்னதாக,  குடியரசு தின விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, இந்தியா கேட் அருகே உள்ள போர் வீரர்கள் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ள கடமையின் பாதை விஜய் சவுக் குடியரசுத் தலைவர் மாளிகையின்  சந்திப்பு பகுதிக்கு வருகை தந்தார்.

இதைத்தொடர்ந்து,  குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு முதன்முறையாக தேசியகொடி ஏற்றி மரியாதை செய்தார். அவருடன்  அவர் கொடியேற்றிய போது, தேசிய கீதம் இசைக்கப்பட்டது.  பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நடைபெற்ற விழாவில் எகிப்து நாட்டு அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழா கொண்டாட்டத்தின்போது வெளிநாட்டு தலைவரை வரவழைப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு எகிப்து அதிபர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். எகிப்து அதிபர் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றது இதுவே முதல் முறையாகும். ஜனாதிபதி திரவுபதி முர்மு மூவர்ண கொடியை ஏற்றிய பிறகு அணி வகுப்பு காலை 10.30 மணிக்கு தொடங்கியது.

கடமைப் பாதையில் ஜனாதிபதி மாளிகை அருகே தொடங்கிய அணிவகுப்பு விஜய் சவுக், இந்தியா கேட், செங்கோட்டை வரை செல்கிறது. இந்த அணிவகுப்பில், முதன்முறையாக எகிப்து நாட்டு வீரர்களும் கலந்துகொள்கின்றனர்.  மேலும், அணிவகுப்பில், இந்தியாவின் உள்நாட்டு திறன், பெண்களின் வலிமை, ராணுவத்திறன், பன்முகத்தன்மை உள்ளிட்டவற்றை பிரதிபலிக்கும் அணிவகுப்பு மிக பிரமாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ராணுவ பிரிவில் முப்படைகள் அணிவகுப்பில் குதிரைப்படை மட்டுமின்றி ஒட்டக்கப்படையும் இடம் பெற்றுள்ளது.

அத்துடன்   கடற்படையில் 144 இளம் மாலுமிகளும், விமானப்படையில் 148 வீரர்களும், முதல்முறையாக 3 பெண் அதிகாரிகள், அக்னிபாத் திட்டத்தில் இருந்து 6 வீரர்களும் குடியரசுத்தின அணிவகுப்பில் பங்கேற்றுள்ளனர்.

இதைத்தொடர்ந்து மத்தியஅரசு துறைகளின் அணிவகுப்பு மாநிலங்களின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் அலங்கார ஊர்களின் அணிவகுப்பு நடைபெற்று வருகிறது. இன்றைய அணிவகுப்பில்  தமிழ்நாடு உட்பட 17 மாநிலங்கள் மற்றும் 6 துறைகளின் அலங்கார ஊர்திகளும் பங்கேற்றுள்ளது.

தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி சமூக மாற்றத்துக்கு உதவிய பெண்கள் வழங்கிய பங்களிப்பை பெண் தலைவர்களை மையப்படுத்தி  உருவாக்கப்பட்டுள்ளது மேலும் நாடு முழுவதிலும் இருந்து 500க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் பங்கேற்று கலை, கலாச்சாரத்தை பிரதிபலிக்கு வண்ணம் நிகழ்ச்சிகளை நடைபெற்றது.

குடியரசு தின அணிவகுப்பின் இறுதியாக வீரர்களின் மோட்டார் சைக்கிள் மற்றும் விமான சாகச நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இது நிச்சயம் அனைவரையும் மெய் சிலிர்க்க வைக்கும் வகையில் இருக்கும். விமான சாகசத்தில் 45 விமானங்கள் பங்கேற்கும் நிலையில் ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட உள்ளது. குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.