சென்னை: சென்னை போர் நினைவு சின்னம் அருகே உள்ள  தீவுத்திடலில் ஆண்டுதோறும் நடைபெறும்  சுற்றுலா-தொழில் பொருட்காட்சி டிசம்பர் 30ந்தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜனவரி  3- ந்தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழக 47-வது சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி, சென்னை தீவுத்திடலில் நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் ஜரூராக நடைபெற்று வருகிறது. இதையடுத்து ஜனவரி  3-ம் தேதி  இந்த பொருட்காட்சி தொடங்கி வைக்கப்பட  உள்ளதாக தமிழ்நாடு சுற்றுலாத்துறை தெரிவித்து உள்ளது.

சென்னையில் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு,  தீவுத்திடலில் சுற்றுலா- தொழில் பொருட்காட்சி நடைபெறுவது வழக்கம். இங்கு, பெரியர்கள் முதல் சிறியவர்கள் வரை குதுகலித்து மகிழும் வகையில், ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெறும். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தீவுத்திடல் பொருட்காட்சி நடைபெறாத நிலையில்,  இந்த ஆண்டுசுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி வருகிற 3-ம் தேதி தொடங்க உள்ளதாக தமிழ்நாடு சுற்றுலாத்துறை தெரிவித்து உள்ளது.

இந்த  பொருட்காட்சியில்,  குழந்தைகள் விளையாடி மகிழும் வகையின ராட்டினங்கள், பொருட்கள் வாங்கும் கடைகள், உணவகங்கள் என பல பொழுதுபோக்கு அம்சங்கள் மட்டுமின்றி, அரசுத் துறைகள், மாநில பொதுத் துறை நிறுவனங்கள், மத்திய அரசு நிறுவனம், பிற மாநில அரசு நிறுவனங்கள் உள்ளிட்ட அரங்குகள் இடம்பெறவுள்ளன. அரசின்  திட்டங்களை மக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் அரசுத்துறை அரங்கங்கள் அமைக்கப்படவுள்ளன. மேலுமதனியார் துறை அரங்குகளும், வர்த்ததக அரங்குகளும் இடம்பெறுகின்றன.

தற்போது, அதற்கான அரங்குகள் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதையடுத்து  வருகிற 3-ந்தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளதுடன், இந்த பொருட்காட்சி தொடர்ந்து  70 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டு  இருப்பதாகவும்,  கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொருட்காட்சி நடத்தப்படும் என தமிழ்நாடு சுற்றுலாத்துறை தெரிவித்து உள்ளது.