சென்னை: தமிழகத்துக்கு கூடுதலாக 4 வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இந்த ரயில்களை இயக்கப்படும் என்று  தெற்கு ரயில்வே கூறி உள்ளது. சென்னையில் இருந்து செங்கோட்டை, கன்னியாகுமரி, நாகர்கோவில், மேட்டுப்பாளையத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

ஏற்கனவே சிறப்பு ரயிலாக 9 ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கூடுதலாக 4  சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டை வரை செல்லக்கூடிய ரயிலும், எழும்பூர் – கன்னியாகுமரி, சென்னை – மேட்டுப்பாளையம், திருச்சி – நாகர்கோவில் ஆகிய ஊர்களுக்கு 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

நாளை காலை 5:00 மணிக்கு தொடங்கவுள்ள முன்பதிவில் இந்த ரயில்களும் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 8 முதல் சென்னை எழும்பூரில் இருந்து கன்னியாகுமரிக்கு தினமும் மாலை 5:15 மணிக்கு ரயில்கள் இயக்கப்படுகிறது.

சென்னை சென்ட்ரலில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு தினமும் இரவு 9:05 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. செப்டம்பர் 7 முதல் திருச்சியில் இருந்து நாகர்கோவிலுக்கு தினமும் பகல் நேர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. செப்டம்பர் 10 முதல் சென்னை எழும்பூரில் இருந்து வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது