சென்னை:  தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், நீலகிரி கோவை உள்பட பல மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்வதற்கான வாய்ப்புஉள் உள்ளது என  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று நீலகிரி, கோவை, தேனி, தென்காசி மாவட்டங்களில் மிக கன மழை பெய்யும் என்றம்,  விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, திருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,  தமிழகத்தின் உள் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஆக.31, செப்.1, 2, 3 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

31-ம் தேதி (இன்று) நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், தேனி, தென்காசி, மதுரை, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. செப்.1-ம் தேதி மேற்கண்ட மாவட்டங்கள் மட்டுமின்றி, திருச்சி, பெரம்பலூர், கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

2-ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், நாமக்கல், திண்டுக்கல் மாவட்டங்களிலும், 3-ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

30-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், நீலகிரி மாட்டம் மசினகுடியில் 10 செ.மீ. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், ஈரோடு மாவட்டம் தாளவாடியில் 9 செ.மீ. நீலகிரி மாவட்டம் கிளென்மார்கனில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

ஆக.31, செப்.1 ஆகிய தேதிகளில் குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகள், இலங்கையை ஒட்டிய தென்மேற்கு, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 45-55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது/