சென்னை: சென்னை மாநகராட்சி தேர்தலுக்கு 200 வார்டுகளில்  அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில், 1198 வாக்குப்பதிவு மையங்கள் பதற்றமானவை என மாநகராட்சி ஆணையரும், தேர்தல் அலுவலருமான ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார். அந்த மையங்களில், கூடுதல் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும் என்றும் பணப்பட்டுவாடா மற்றும் முறைகேடுகள் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க, இலவசப் புகார் எண் – 1800 4257 012 என்ற எண்ணிற்குப் புகார் அளிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 19ந்தேதி நடைபெற உள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளிலும் தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், தேர்தல் முறைகேடுகள் மற்றும் பணப்பட்டுவாடாவைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையுடன் சென்னை மாநகராட்சி ஆணையரும், மாவட்டத் தேர்தல் அலுவலருமான ககன்தீப் சிங் பேடி ரிப்பன் மாளிகையில் உள்ள அம்மா அரங்கத்தில் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில்,சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், மாநகராட்சி உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதையடுத்து, மாவட்டத் தேர்தல் அலுவலருமான ககன்தீப் சிங் பேடி காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளரைச் சந்தித்தனர். செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர் சங்கர் ஜிவால், சென்னையில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி,  “வாக்களிக்கும் தேதிக்கு 72 மணி நேரத்திற்கு முன்பாக கூடுதல் பறக்கும் படையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். சென்னையில் அமைதியான முறையில் தேர்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன” எனத் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து பேசிய மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, “சென்னையில் 45 பறக்கும்படைகள் செயல்பட்டுவருகின்றன. இந்தப் பறக்கும்படை குழுவில் உதவி செயற்பொறியாளர், இரு காவலர்கள், ஒளிப்பதிவாளர் உள்பட நான்கு பேர் என மண்டலம் ஒன்றிற்கு மூன்று குழு தினமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றன. கூடுதலாக ஒரு மண்டலத்திற்கு மூன்று குழுக்கள் என 15 மண்டலத்திற்கும் 45 குழுக்கள் அமைக்கப்பட உள்ளன. இந்தக் குழு 17ஆம் தேதி காலை முதல் கண்காணிப்புப் பணியில் ஈடுபடும்.

பணப்பட்டுவாடா மற்றும் முறைகேடுகள் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க, இலவசப் புகார் எண் – 1800 4257 012 என்ற எண்ணிற்குப் புகார் அளிக்கலாம்.

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக இதுவரை 55 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. ஐந்தாயிரத்து 794 வாக்குப்பதிவு மையங்களில் கேமரா பொருத்தும் பணி  நடைபெறும்.

தேர்தல் பணியில் ஈடுபடும் 27 ஆயிரத்து 812 அலுவலர்களுக்கு கணினி மூலம் 18ஆம் தேதி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அன்று மாலை வாக்குப்பதிவு மையத்திற்குத் தேவையான, உபகரணங்கள் அந்தந்த அலுவலர்களுக்கு வழங்கப்படும்.

சென்னையில் உள்ள மொத்த வாக்குப்பதிவு மையங்களில் ஆயிரத்து 198 வாக்குப்பதிவு மையங்கள் பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்த மையங்களில் 267 நுண் பார்வையாளர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர். இந்த மையங்களில் கூடுதல் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும். மற்ற மையங்களிலும் கேமராக்கள் பொருத்தப்படும்.

சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் இதுவரை 45 தேர்தல் பறக்கும் படையால் 1.45 கோடி ரூபாய் பறிமுதல்செய்யப்பட்டுள்ளது. கடந்த 27ஆம் தேதிமுதல் இன்று காலை 6 மணி வரை 14 இடங்களில் 18.13 லட்சம் ரொக்கமாகவும், இதில் 8 இடங்களில் 1.27 கோடி பரிசு பொருள்களாகவும் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன.

பணம், பரிசுப் பொருள்களின் மொத்த மதிப்பு 1.45 கோடி ரூபாய் ஆகும். கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் தகுந்த பாதுகாப்பு கவசத்துடன் மாலை 5 மணிக்கு மேல் வாக்களிக்க ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

மேலும், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க உதவியாக ஆயிரத்து 368 சக்கர நாற்காலிகள் வாக்குச்சாவடிகளில் தயார் நிலையில் வைக்கப்படும். இதற்காகச் சாய்தளம் அமைக்கப்பட்டுள்ளது. தேவையான இடங்களில் மேலும் கூடுதலாக சாய்தளம் அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.