ராமேஷ்வரம்: இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட நாகை மீனவர்கள் 12 பேரை  இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டு உள்ளது. விடுதலை செய்யப்பட்ட 12 மீனவர்களும் ஓரிரு நாளில்  சொந்த ஊர் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டின் நாகை மாவட்டம் அக்கரைபேட்டை சேர்ந்த மீனவர்கள் 12 பேர்  கடந்த 11ஆம் தேதி எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அவர்களை 17ந்தேதி  சிறைகாவலில் வைக்க இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில், தமிழக முதல்வரின் வேண்டுகோளின் பேரில் மத்தியஅரசு இலங்கை அரசுடன் பேசியது.

இதையடுத்து,  நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தமிழ்நாட்டின் 12 மீனவர்கள், நிபந்தனையுடன் விடுதலை செய்ய பருத்தித்துறை நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. மேலும், மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பல லட்சம் மதிப்பிலான விசைப்படகு அந்நாட்டு அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளது/

இதையடுத்து,  விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 12 பேரும், அங்குள்ள இந்திய துணைத்தூதரக அதிகாரிகளின் உதவியுடன் ஒரு சில தினங்களில் மீனவர்கள் சொந்த ஊர் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.