சென்னை: 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வின் போது தேர்வு மையங்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்க மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில்  10, 11 ,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு  நாளை மறுநாள் (மே 5ந்தேதி) தொடங்குகிறது. முதலில்   12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு  மே 5-ஆம் தேதி தொடங்கி  28ஆம் தேதி வரை நடைபெறுகிறது.  அதேபோல் 11ஆம் வகுப்புக்கு மே 9-ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் நிலையில்,  10-ஆம் வகுப்புக்கு மே 6-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வுக்காக தேர்வு மையங்கள் தயாராக வைக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், பொதுத்தேர்வின் போது தேர்வு மையங்களில் மின் தடை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் மண்டல  பொறியாளர்களுக்கு  என்று மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்களுக்கு மின்சார வாரியம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,   பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகத்தை நிறுத்த ஏற்கனவே திட்டமிட்டிருந்தாலும் கூட பொதுத்தேர்வின் போது மின் தடை ஏற்படக்கூடாது. பொதுத்தேர்வு மையங்களுக்கு அருகில் இருக்கும் மின்மாற்றி களை ஆய்வு செய்ய வேண்டும்; பழுதடைந்திருந்தால் உடனடியாக மாற்றவும் அதிகாரிகளுக்கு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.