சித்திரதுர்கா

விமானப்படை தாக்குதலால் கர்நாடக மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு 22 இடங்களில் வெற்றி வாய்ப்பு உள்ளதாக அம்மாநில பாஜக தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

புல்வாமாவில் நடந்த ஜெய்ஷ் ஈ முகமது தீவிரவாதிகளின் தாக்குதலால் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர்.     அதை ஒட்டி காஷ்மீர் எல்லையில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் ஜெய்ஷ் ஈ முகமது இயக்கத்தினரின் முகாம்கள் அடியோடு அழிக்கப்பட்டுள்ளன.   இந்த தாக்குதலுக்கு அனைத்து கட்சியினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

நேற்று கர்நாடக மாநில பாஜக தலைவர் சித்ரதுர்கா நகருக்கு வந்திருந்தார்.  அவர் அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், “பிரதமர் சமீபத்தில் தீவிரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்த எடுத்த முடிவின் மூலம் நாட்டின் மக்கள் குறிப்பாக இளைஞர்களிடையே தேசிய உணர்வு அதிகரித்துள்ளது.  இது கர்நாடகா தேர்தலில் பாஜகவுக்கு அதிக இடங்களில் வெற்றியை தேடித் தரும்.  இந்திய விமானப்படை பயங்கர வாதிகளின் முகாம்களை அடியோடு ஒழித்துள்ளது.    இதன் விளைவாக கர்நாடக மாநிலத்தில் பாஜகவுக்கு 22 தொகுதிகளுக்கு மேல் வெற்றி வாய்ப்பு உள்ளது.

கர்நாடக அமைச்சர் மனகோலி சிஆர்பிஎஃப் வீரர்கள் மீதும் பயங்கரவாதிகள் மீதும் எவ்வித தாக்குதலும் நடைபெறவில்லை என தெரிவித்துள்ளர்.  ஒரு அமைச்சர் இவ்வாறு பொறுப்பின்றி அறிவிப்பு அளிப்பது தவறானது.

இந்த தாக்குதல் மக்கள் மனதில் பிரதமர் மோடி மிது ஒரு நல்லெண்ணத்தை உருவாக்கி உள்ளது.  அதனால் மோடி அறுதிப் பெரும்பான்மையுடன் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் ஆவார்” என தெரிவித்துள்ளார்.