prabakaran
பிரபாகரன் மகன் இறந்தது எப்படி? யாரால்? என்ற கேள்வி எழுப்பி அதற்கு பதிலளித்துள்ளார் இலங்கை ராணுவத்தின் முன்னாள் ராணுவத்தளபதி சரத் பொன்சேகா.
’’இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடைபெற்ற கால கட்டத்தில் நான் சீனா சென்றிருந்தேன். மே – 11 முதல் மே -17 வரை நான் இலங்கையில் இல்லை. புலிகளை எப்படி தாக்குவது என்ற வரைபடங்கள் உபகரணங்கள் என பல விசயங்களை நான் சீனாவுக்கு எடுத்துச் சென்றிருந்தேன். அங்கே இருந்த வண்ணம் ஒரு நாளைக்கு குறைந்தது 3 தடவையாவது நான் கட்டளை தளபதிகளோடு பேசி இருந்தேன்’’ என்கிறார் சரத்பொன்சேகா.
அவர் மேலும், ‘’மே மாதம் 19ம் தேதி வரை பிரபாகரன் உயிரோடு இருந்தார். ஆனால் மே 18 அன்றே போர் முடிவடைந்து விட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. மே 19 அன்று கூட அவர் உயிருடன் இருந்து, ராணுவம் மீது தாக்குதல் நடத்தினார். 16 ஆம் தேதி இரவு நந்திக்கடல் களப்பை சுற்றி மூன்று பாதுகாப்பு வலயங்களை நான் போட்டிருந்தேன். விடுதலை புலிகள் இந்த பாதுகாப்பு வலயங்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு முல்லைத்தீவு காட்டுக்குள் செல்வதற்கு முற்பட்டனர். முதலாவது பாதுகாப்பு வலயம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட போது உயிரிழந்தவர்களின் சுமார் 75 சடலங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டது.
இதன் போது சில சடலங்களை எம்மால் எடுக்க முடியாமல் போயிருக்கலாம். களப்பில் விழுந்திருக்கலாம். சூட்டுக் காயங்களுடன் சிலரை தூக்கியும் சென்றிருக்கலாம். அந்த இடத் தில் பிரபாகரனின் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் இருந்தார்கள் என்ற உறுதியான நம்பிக்கை எனக்குள்ளது.
பாதுகாப்பு வலயங்களை உடைத்து கொண்டு பிரபாகரனின் குடும்பத்தினருடன் முல்லைத்தீவு காட்டிற்குள் செல்வதற்கே விடுதலை புலிகளின் போராளிகள் முற்பட்டனர். அவ்வாறான சந்தர்ப்பத்தில் இளைய மகன் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகியும் இருக்கலாம். எனவே அந்த புகைப்படங்கள் இராணுவ முகாம் ஒன்றில் இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூற இயலாது. உயிரிழந்திருக்கலாம். அவ்வாறான படங்களை எடுக்கவும் முடியும். ஆனால் அந்த படங்கள் உண்மை என்றால் பாதுகாப்பு வலயங்களை உடைக்க முற்பட்ட போது இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்திருக்கலாம் என்கிறார் சரத் பொன்சேகா.
ஏனென்றால் பாதுகாப்பு வலயங்களை உடைத்துக் கொண்டு முன்னோக்கி நகர முற்படுகையில், அதாவது 17 ஆம் தேதி இரவு அவர்கள் களப்பு பகுதியில் வட திசைக்கு வந்து எமது பாதுகாப்பு வலயங்களை உடைத்து புதுமாத்தளன் பக்கம் செல்வதற்கு முற்பட்டனர். அந்த இடத்தில் தான் சாள்ஸ் என்டனி உட்பட 200க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இதன் போது இடம்பெற்ற போர் 17 ஆம் தேதி இரவு 2.30 மணியிலிருந்து மறுநாள் அதாவது 18 ஆம் தேதி பகல் 1 மணி வரை நீடித்தது. அங்கு தான் 200 பேர் வரை கொல்லப்பட்டனர். பிரபாகரனும் இந்த இடத்தில் இருந்து தான் போர் நீடித்ததன் காரணமாக அங்கிருந்து வட திசையை நோக்கி செல்ல முற்பட்டிருப்பார் என்பது எனக்கு தெரியும். எனவே ராணுவ பங்கரில் வைத்து பிரபாகரனின் மகன் சுட்டுக் கொல்லப் படவில்லை என்கிறார் சரத் பொன்சேகா. யாரை கொலை செய்தாவது போரை முடி என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தபோதும் , நான் அப்படிச் செய்யவில்லை என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.