2011 தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சிக்கு தென்காசி, நாங்குநேரி என இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதில் தென்காசி தொகுதியில் சரத்குமாரும், நான்குநேரி தொகுதியில் எர்ணாவூர் நாராயணனும் அதிமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். கடந்த மாதம் அதிமுக தலைமையை விமர்சித்துவிட்டு, கூட்டணியில் இருந்து பிரிவதாகவும், பாஜக கூட்டணியில் இடம்பெறப்போவதாகவும் தெரிவித்திருந்தார் சரத்குமார். அப்போது எர்ணாவூர் நாராயணனுக்கும், சரத்குமாருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, சமத்துவ மக்கள் கழகம் என தனிக் கட்சி தொடங்கினார் எர்ணாவூர் நாராயணன். தனிக் கட்சி தொடங்கியவுடன், போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
இந்த நிலையில் சரத்குமார் திடீரென இன்று ஜெயலலிதாவை சந்தித்து அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளார்.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்திற்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் இன்று சென்றார். அங்கு அவர் ஜெயலலிதாவை சந்தித்தார்.
இச்சந்திப்பிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், அதிமுக கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி உள்ளது. எத்தனைத் தொகுதிகளில் போட்டி என்பது பின்னர் அறிவிக்கப்படும். கட்சியை வளர்ப்பதற்கு அதிமுகவில் சேருவதுதான் சிறந்த முடிவு என்றார்.