கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் பல நாட்டு தேர்தல்களில் முறைகேடு செய்தது போல கடந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலிலும் முறைகேடு செய்து இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
பேஸ்புக் பயனர்கள் பற்றிய விவரங்கள் அவர்களுக்கே தெரியாமல் எடுக்கப்பட்ட பிரச்சனை இப்போது பூதாகரமாகியுள்ளது. இந்த முறைகேட்டில் முதலில் பாஜக கட்சி காங்கிரஸ் மீது புகார் கூறியது. ராகுல் காந்தி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தை பிரபலப்படுத்த கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்தின் உதவியை நாடினார் என்று பா.ஜ.க. தெரிவித்தது.
ஆனால் இந்த முறைகேட்டில் பாஜக கட்சி முக்கிய பங்கு வகித்திருப்பது தெரியவந்துள்ளது. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்தின் இந்திய கிளையான ‘ஓவலேனோ பிசினஸ் இண்டலிஜென்ஸ்’ என்ற நிறுவனத்தை பாஜகதான் பயன்படுத்தி உள்ளது. இதை ‘ஓவலேனோ பிசினஸ் இண்டலிஜென்ஸ்’ நிறுவனத்தின் இந்திய சிஇஓ ஒப்புக்கொண்டிருக்கிறார்.
அமெரிக்காவில் இருக்கும் பேஸ்புக் தலைமையகம் சென்ற ஒரே பிரதமர் பாஜகவை சேர்ந்த மோடிதான். 2014 தேர்தலில் உதவியதற்கான நன்றிக் கடன்தான் இந்த சந்திப்பு என்றும், இந்த விவகாரத்தில் பெரும் தொகை கைமாறி இருக்கலாம் என்றும் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியிருக்கிறது.
தவிர ‘ஓவலேனோ பிசினஸ் இண்டலிஜென்ஸ்’ நிறுவனத்தின் ‘லிங்க்டின்’ பக்கத்தில் முக்கியமான தகவல் ஒன்று இருக்கிறது. அதாவது, நான்கு வெவ்வேறு தேர்தல்களில் பாஜக கட்சிக்காக நாங்கள் உதவி செய்தோம். அதன் மூலம் பாஜக கட்சி வெற்றி பெற்றது என்று அந்த நிறுவனம் வெளிப்படையாக குறிப்பிட்டு உள்ளது.
இந்த ‘ஓவலேனோ பிசினஸ் இண்டலிஜென்ஸ்’ நிறுவனம் மூலம் பாஜக இந்தியா முழுக்க பொய்யான செய்திகளை பரப்பி மக்களின் மனநிலையை மாற்றியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிறுவனத்துடன் ராஜ்நாத் சிங்தான் அதிக நெருக்கமாக இருக்கிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.