d-1
அலுவலகத்துக்குள் நியூஸ்பாண்ட் வர..  பெரிய மலர் மாலை போட்டு வரவேற்றோம்.
“என்ன வரவேற்பு பலமாக இருக்கிறது?” என்ற நியூஸ்பாண்ட், “கோயில்விழா – ஆடு – மாலை – என ஏதேதோ நினைவுக்கு வருகிறது” என்றார் கிண்டலாகக.
நாம், “எல்லோரையும் முந்திக்கொண்டு, ஐவர் அணியினர் சொத்துக்களை மேலிடம் ரெய்ட் செய்யப்போகிறது என்று கடந்த ஆறாம் தேதியே சொன்னீரே…! அதெல்லாம் அப்படியே நடந்து வருகிறதே..!  அதற்காக உம்மை மனமார வாழ்த்தத்தான் இந்த மலர் மாலை!” என்றோம்.
“எனக்கு கிடைத்த தகவல்களைக் கொடுத்தேன்!” என்று தன்னடக்கமாகச் சொன்ன நியூஸ்பாண்ட், “ஐவரிடமிருந்து மேலிடம் கைப்பற்றியது சுமார் ஏழாயிரம் கோடி என்று சொன்னேன் அல்லவா. இந்தத் தொகையை கேட்டு தலைமையே அதிர்ந்துவிட்டதாம்!
எந்த ஒரு திட்டத்திற்கும் மையப்படுத்த பட்ட கமிசன் 40 சதவிகிதம். இதில் 30 சதவிகிதம்  மன்னார்குடி பக்கம் போய்விடுமாம். அப்படி இருக்கையில் இவர்களிடம் ஏது இத்தனை பணம் கட்டுக்கட்டாக  என்று தலைமையும், சின்ன தலைமையும் அதிர்ந்து போய்விட்டதாம்!”
“ஓ..”
“ரொக்க பணத்தை பறிமுதல் செய்ததோடு வேலை முடியவில்லை. ஐவரின் அசையும் அசையா சொத்துகள் அனைத்தையும் கணக்கிடும் பணி உளவுத்துறைக்கு அளிக்கப்பட்டிருக்கிறதாம். தோண்டத் தோண்ட கிடைக்கும் புதையல் போல,  தொடர்ந்து கிடைக்கும் சொத்து விவரங்களைக் கண்டு உளவுத்துறை அதிகாரிகளே அரண்டு கிடக்கிறார்களாம்!”
“எத்தனை பவ்யமாக கும்பிடு போட்டு வந்தார்கள். அந்த பணிவுக்குப் பின்னால் இத்தனை விவகாரங்களா?”
“அந்த சொத்துக்கள், மேலிடம் காட்டும் நபர்களுக்கு மாற்றப்பட்டு வருகிறதாம்.  ஐவர் மட்டுமல்ல.. ஒவ்வொரு மாண்புமிகுவின் சொத்துக்கணக்குகளும் தோட்டத்துக்கு அனுப்பப்பட்டுக்கொண்டிருக்கிறதாம்” என்று சொல்லி நிறுத்திய நியூஸ்பாண்ட், “இவர்களால், பெண்களுக்கு  யோகம் அடிக்கிறது!” என்று நிறுத்தினார்.
“அதென்ன, பெண்களுக்கு யோகம்? புரியும்படி சொல்லும்!” என்றோம்.
“வரும் சட்டமன்றத் தேர்தலில் அக் கட்சி சார்பாக  போட்டியிட பெரும்பாலும் பெண்களுக்கே வாய்ப்பு அளிக்கப்போவதாக முடிவாம்!”
“ஏனாம்..?”
“பெண்கள் என்றால் தங்களுக்கு அடங்கி நடப்பார்கள். என்று நினைக்கிறார்களாம் அந்த மேலிடத்து பெண்கள் இருவரும்!”
சொல்லிவிட்டு நியூஸ்பாண்ட் சிரித்த சிரிப்பில் அலுவலகமே அதிர்ந்தது.