பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஜாவித் மியான்தத்தை “தொலைச்சுடுவேன்” என்று மிரட்டியதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தின் எட்ஜ்பஸ்டன் நகரில் நேற்று நடந்தது. இதன் தமிழ் வர்ணனையை முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்தும் நடிகர் ஆர்.ஜே.பாலாஜியும் செய்தனர்.
மழைக் குறுக்கிட்டு நேற்று ஆட்டம் பாதிக்கப்பட்ட போது, ஸ்ரீகாந்த் தனது மலரும் நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.
1992-ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை போட்டியின் போது, இந்திய வீரர் கிரண் மோரேவை கிண்டல் செய்வது போல பாகிஸ்தான் வீரர் மியான்தத் துள்ளிக்குதித்த ஒளிப்படங்கள் வெளியானது.
அது குறித்து ஸ்ரீகாந்த் தெரிவித்தபோது, “அந்த போட்டியில் நானும் விளையாடினேன். மியான் தத், மோரேவிடம், ’ஏன் எப்ப பார்த்தாலும் ஓ ஓ என்று கத்திக்கொண்டே இருக்கிறாய்’ என்று கேட்டார். அதற்கு மோரே, ’அப்படி நான் கத்தவில்லையே’ என்றார்.
ஆனாலும் மோரே குறித்து அம்பயரிடம் மியான்தத் புகார் தெரிவித்தார்.அது மட்டுமல்ல.. மோரே எல்பிடபிள்யூ அப்பீல் கேட்பது போல குதித்து குதித்து கிண்டலடித்தார் மியான்தத்.
இதே போல சென்னையில நடந்த ஒரு போட்டியின்போது, என்னிடமும் மியான்தத் அநாகரீகமாக நடந்துகொண்டார். உடனே நான், “இது எங்கள் ஊர்.. எங்கள் ஏரியா. தொலைத்துவிடுவேன்” என்று எச்சரித்தேன்” என்று ஸ்ரீகாந்த் தனது மலரும் நினைவுகளை பகிரந்துகொண்டார்.