NTLRG_151230144102000000
விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றி படம் எடுக்கிறேன் பேர்வழி என்று அவர்களது வயிற்றில் ஏறி மிதிப்பதுதானே டைரக்டர் பாலாவின் பாணி… இதிலும் அப்படித்தான்!
நலிந்து வரும் கரகாட்ட மனிதர்களின் வாழ்வைச் சொல்கிறேன் என்று களம் இறங்கி, அதகளம் பண்ணியிருக்கிறார்.
கலை வளர்த்த தஞ்சை தரணியில் ஒரு கரகாட்ட கலைஞன்  சசிகுமார்.
தலையில்  சுற்றும் கரகத்தோடு, அவனையே சுற்றும் வரலட்சுமி.
சூறாவளியின் அம்மாவோ, கவர்மெண்ட் மாப்பிள்ளை சுரேசுக்கு, மகளை திருமணம் செய்ய விரும்புகிறார். மகள் மறுக்க.. சன்னாசியிடம் முறையிடுகிறார். சன்னாசியும், ரெகமண்ட் செய்ய… தன் காதலன் விருப்பத்துக்காக  அந்த சுரேசை திருமணம் செய்கிறார்,
அப்பாவியாக வந்து பெண் கேட்டு திருமணம் செய்த சுரேஷ், அதன் பிறகு, வரலட்சுமி  பாலா ஸ்டைலில் படுத்தி எடுக்கிறார்.
அப்புறம் என்ன.. வரலட்சுமி செத்துப்போக, சூடேறிய சசிகுமார், சுரேஷை…  ம்… அதேதான்!
சசிகுமார் ஒன்றும் “நடிகர் திலகம்” இல்லைதான்.. ஆனால் ஏதோ கொஞ்சம் நடிக்க்கூடியவர்தான்.  ஆனால் ஏனோ இதில் படம் முழுக்க ஒருவித பதட்டத்துடனே வந்து போகிறார். நாதஸ்வரம் வாசிக்கும்போது, துளைகளில் விரல்கள் நடனமாடும் அல்லவா..  நாதஸ்வர வித்வான்(!) ஆன வரும் இவரது விரல்கள் அசையவே இல்லை. இது ஜஸ்ட் ஒரு எக்ஸாம்பிள்தான்!
அவர் மீது ஆசைப்படும் கரட்ட பெண்ணாக வரும் வரலட்சுமி அசத்தி இருக்கிறார். நடனத்தில் மட்டுமல்ல.. பேச்சிலும் அப்படி ஒரு வேகம்! சசிகுமாரை, “மாமோய், மாமோய்” என்று வரலட்சுமி அழைக்கும் அழகே அழகு!
எப்போதும் அதிரடியாகப் பேசும் அவர், திருமணத்தின் போது மவுனமாக பார்க்கும் காட்சியில் உருக்கிவிடுகிறார்.
வரலட்சுமியை விரும்பி திருமணம் செய்துகொண்டு கொடுமைப்படுத்தும் கணவனாக வருகிறார் புதுமுகம் சுரேஷ்.   அப்பாவி பாவனையும், அதிரடி கொடூரமும் அசத்தலாய் வருகிறது அவருக்கு.
சசிகுமாரின் அப்பாவாக, மூத்த கலைஞராக வரும் ஜி.ம். குமார், வழக்கமான இயல்பான நடிப்பு.
இசை இளையராஜா. வேறென்ன சொல்வது..  ரசிக்க, வியக்க,லயிக்க வைத்து வழக்கம்போல் ராஜாங்கம் நடத்துகிறார் ராஜா!
படம் பார்ப்பவர்களை அதிரவைக்க வேண்டும் என்பதை மட்டுமே குறிக்கோளாக வைத்திருக்கிறார் பாலா. வரலட்சுமி அறிமுக காட்சியிலேயே வருங்கால மாமனாருடன் “கட்டிங்” போடுவது, ஆபாச வசனங்கள், கணவனிடம் அவர் படும்பாடு, அப்புறம் அந்த கணவனை சசிகுமார் தாக்குகிற தாக்கு…
என்ன சொல்ல வருகிறார் பாலா?
இந்த தாரைத்தப்பட்டையில் சத்தம் இருக்கிறதே தவிர தாள லயம் மிஸ்ஸிங்!