1 tamilini

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முக்கிய பொறுப்பாளர்களில் ஒருவராக இருந்த மறைந்த தமிழினி எழுதிய “ஓர் போர்வாளின் நிழலில்..” புத்தகம்  உலகெங்கும் உள்ள தமிழர்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.
“சமாதானத்தை ஏற்பதற்கான மனத்துணிவு புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு இல்லை” என்பதாக அந்நூலில் தமிழினி எழுதியிருக்கிறார்.  இதையடுத்து, புலி எதிர்ப்பாளர்கள், “சரியாக விமர்சித்திருக்கிறார் தமிழினி” என்றும், புலி ஆதரவாளர்கள், “தமிழினி துரோகம் செய்துவிட்டார்கள்” என்றும் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், தமிழினியின் அந்த புத்தகம் திரித்து வெளியிடப்பட்டுள்ளது என்று  பாரீஸில் வசிக்கும், ஈழத்தமிழரான கே.டி. துளசி  குற்றம்சாட்டி உள்ளார்.
அவர் எழுதி உள்ள முகநூல் பதிவு:
“தமிழினி அக்காவின் சுயசரிதை அவரது இறப்பின் பின் திரிவுபடுத்தப்பட்டு/சில விடயங்கள் உட்புகுத்தப்பட்டு தான் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது என 100% என்னால் அடித்துக்கூற முடியும்.
அதற்கான ஆதாரங்களில் ஒன்று தமிழகத்தில் காலச்சுவடு வெளியிட்டுள்ள அப்புத்தகத்தின் பின் அட்டையிலுள்ள வரிகள்.
தமிழினி அக்கா சிறையில் இருந்த போது தமிழகத்தை சேர்ந்த பிரேமா ரேவதி என்பவர் “நலமா தமிழினி” என கேட்டு தமிழினி அக்காவையும் புலிகளையும் விமர்சித்து கடிதம் எழுதியிருந்தார். அதை வாசிக்க :http://www.kalachuvadu.com/issue-116/page63.asp
அதில் வரும் ஒரு பந்தியே இப்புத்தகத்தின் பின் அட்டையில் சேர்க்கப்பட்டு அதன் மேலே தமிழினி அக்காவின் படத்தையும் கீழே தமிழினி எனவும் போட்டு அதை தமிழினி அக்காவின் வரிகள் போல் காட்டியுள்ளார்கள். பிரேமா ரேவதி என்பவரின் வரிகள் இங்கே தமிழினி அக்காவின் வரிகளாக திரிவுபடுத்தி காட்டப்பட்டது ஏன் என தமிழினி அக்காவின் கணவர் ஜெயன் தேவா (ஜெயக்குமரன்) அவர்கள் விளக்குவீர்களா?
புத்தகத்தின் அட்டையிலேயே திரிவுபடுத்தல் இடம்பெற்றுள்ள போது உள்ளேயும் பல திரிவுபடுத்தல்கள், திட்டமிட்ட உட்புகுத்தல்கள் இடம்பெற்றிருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை” – இவ்வாறு கே.டி. துளசி குறிப்பிட்டுள்ளார்.