சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் 26,174 பேர் விருப்ப மனு கொடுத்திருந்தனர். முதலமைச்சர் ஜெயலலிதா இவர்களை தொகுதி வாரியாக அழைத்து கடந்த 6–ம் தேதி முதல் நேர்காணல் நடத்தி வருகிறார்.
திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு தொகுதிக்கு 2 பேர் வீதம் அழைக்கப்பட்டு நேர்காணல் நடத்தப்பட்டு வருகிறது.
போயஸ்கார்டனில் இன்று 7வது நாளாக திண்டுக்கல், திருவாரூர், தேனி, ஈரோடு மாவட்டங்களில் விடுபட்ட தொகுதிகளுக்கு முதல்– அமைச்சர் ஜெயலலிதா நேர்காணல் நடத்தினார்.
இந்த நேர்காணலில் கலந்து கொள்வதற்காக காலை 10 மணி முதல் போயஸ்கார்டன் பகுதிக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் வர தொடங்கி விட்டனர். சிலர் அவர்களது ஆதரவாளர்களையும் உடன் அழைத்து வந்திருந்தனர்.
நேர்காணல் அழைப்பு கடிதத்தை சரிபார்த்து ஒவ்வொருவரையும் போயஸ் கார்டனுக்குள் போலீசார் அனுப்பி வைத்தனர். இன்று தொண்டர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் போயஸ் கார்டன் பகுதி பரபரப்பாக இருந்தது.