jayalalitha
அதிமுக வேட்பாளர் நேர்காணல் இன்று 3வது நாளாக நடைபெறுகிறது. சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்தில் நடைபெறும் இந்த நேர்காணலில் அதிமுக பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதாவே நேரடியாக வேட்பாளர்களை வரவழைத்து நேர்காணல் நடத்தி வருகிறார்.
இன்றைய நேர்காணலில் சிவகங்கை, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர். விருப்பமனு தாக்கல் செய்தவர்கள் மாவட்ட வாரியாக அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் வெயிலில் காத்திருக்க வைக்கப்படாமல் போயஸ் கார்டன் இல்லத்தில் உள்ள ஏ.சி. அறையில் 50 பேராக அமர வைக்கப்படுகிறார்கள்.
பின்னர் ஜெயலலிதா ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து விசாரிக்கிறார். அவர்களது குடும்ப பின்னணி, கட்சிப் பணியாற்றும் விதம், தொழில் உள்ளிட்டவை பற்றி விசாரிக்கிறார். மூத்த நிர்வாகிகளோ, உதவியாளர்களோ யாரும் இன்றி ஜெயலலிதாவே நேர்காணல் நடத்துகிறார். அவர்கள் அளிக்கும் பதில்களை தன் கைப்பட குறிப்பு எடுத்துக் கொள்கிறார். ஒவ்வொரு தொகுதிக்கும் எத்தனை பேர் விருப்பமனு கொடுத்துள்ளனர் என்பதை கையில் வைத்துக் கொண்டு அனைவரிடமும் விசாரித்து அவர்களில் இருந்து ஒரு வேட்பாளரை தேர்வு செய்கிறார்.
இதனால் நேர்காணலுக்கு சென்று திரும்பும் அ.தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர். நேர்காணலுக்கு சென்று வந்தவர்கள் சீட் கிடைத்து விடும் என்று நம்பிக்கையுடன் உள்ளனர்.