index_2235179g

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்குப் புதிய சின்னம்: தென்னந்தோப்பு.
அதென்ன ’தோப்பு’?
மரங்களின் ‘தொகுப்பு’ என்ற சொல்தான் ’தோப்பு’ என்று மாறிவிட்டதாகப் பாவாணர் எழுதுகிறார்.

அப்படியே பார்த்தாலும் தென்னை + தோப்பு = தென்னைத்தோப்பு என்றல்லவா வரவேண்டும், தென்னந்தோப்பு என்று மாறியது என்ன கணக்கு?
யோசித்தால், பனை + தோப்பு = பனந்தோப்பு என்று ஆகிறது. இதற்கு ஏதோ ஒரு சிறப்பு விதிமுறை இருக்கவேண்டுமல்லவா?
’வேற்றுமை ஆயின் ஐகான் இறுமொழி
ஈற்று அழிவொடும் அம் ஏற்பவும் உளவே’ என்கிறது நன்னூல்.
அதாவது, ‘ஐ’யில் முடியும் ஒரு சொல்லின் நிறைவுப்பகுதி அழிந்து, அங்கே ‘அம்’ சேரும்.
தென்னை => தென்ன் => தென்ன் + அம் ==> தென்னம் என்று மாறும்.
ஆக, இப்போது நம்மிடம் உள்ளது: தென்னம் + தோப்பு
இங்கே முதல் சொல் மகர மெய்யில், அதாவது ‘ம்’ என்ற எழுத்தில் முடிகிறது, அது ‘தோ’ என்கிற வல்லின எழுத்தோடு சேர்ந்தால் என்ன ஆகும்? அதையும் நன்னூல் சொல்கிறது:
‘மவ்வீறு ஒற்று அழிந்து…
வன்மைக்கு இனமாத் திரிபவும் ஆகும்.’
அதாவது, ‘ம்’ என்ற எழுத்து அழிந்துவிடும், அடுத்து வரும் வல்லின எழுத்தின் இன எழுத்தாக மாறிவிடும்.
‘த’ என்ற வல்லின எழுத்தின் இன எழுந்து ‘ந’, அதன் மெய்யெழுத்து, ‘ந்’.
ஆக,
தென்னம் + தோப்பு => தென்னந் + தோப்பு => தென்னந்தோப்பு
இப்படி மற்ற சின்னங்களுக்கும் இலக்கணக்குறிப்பு பார்க்கலாமா?

– என். சொக்கன்