சென்னை

பாஜகவின் எழுச்சியினால் காங்கிரஸ் மற்றும் திமுகவிலும் சிறுபான்மையினர் முடக்கப்படுவதாக காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர் தேர்வு குறித்து பல சர்ச்சைக்குரிய செய்திகள் வெளியாகின. இந்த தேர்தல் வேட்பாளர்களில் சிறுபான்மையினருக்கு தொகுதிகள் அளிக்கப்படவில்லை என்னும் புகார் பரவலாக எழுந்துள்ளது. இந்நிலையில் ‘தி இந்து’ நாளிதழுக்கு காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

இந்த பேட்டியின் விவரம் பின் வருமாறு :

”திமுகவைப் போலவே காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலிலும் முஸ்லிம்களுக்கு இடம் இல்லையே? இளைஞர்களுக்கு ராகுல் வாய்ப்பு தருவார் என்ற எதிர்பார்ப்பு பொய்த்திருக்கிறதே?

இம்முறை திமுக  திருநெல்வேலி தொகுதியில் ஒரு கிறிஸ்தவருக்கும், ராமநாதபுரம் தொகுதியில் ஒரு இஸ்லாமியருக்கும்  வாய்ப்பு கொடுத்திருக்கிறது.   அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்பதையும், புதுமுகங்கள் இடம்பெறவில்லை என்பதையும் ஒப்புக்கொள்கிறேன்.  அதைப் பற்றி இப்போது பேச விரும்பவில்லை.   இந்த  தேர்தல் முடிந்த பிறகு என் கருத்துகளை கட்சியின் தலைமைக்குத் தெரிவிப்பேன்.

பாஜகவின் எழுச்சி திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளிலும்கூட முஸ்லிம்களை முடக்கியிருக்கிறது என்று சொல்லலாமா?

உண்மைதான்.    முந்தைய திராவிட இயக்கங்களின் எழுச்சி, எல்லோருக்கும் சமவாய்ப்பு கோரும் சமூக நீதிப் பார்வையிலானது. தற்போதைய பாஜகவின் வளர்ச்சியோ ‘ஒரு எதிரியை அடையாளம் காட்டாமல் ஒரு வலுவான கட்சியை, வாங்கு வங்கியைக் கட்டமைக்க முடியாது’ என்கின்ற சர்வாதிகார பாணி அரசியல் ஆகும்.   தேவையில்லாமல் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மீது வெறுப்பை ஏற்படுத்தும் பிரச்சாரத்தை ஆர்எஸ்எஸ்ஸும் பாஜகவும் திட்டமிட்டு நடத்தினார்கள்.

அத்துடன்  சிறுபான்மையினரின் நலனுக்கான விஷயங்களைப் பேசுவதே பெரும்பான்மையினருக்கு விரோதமானது என்பது போன்ற ஒரு பொய்யான தோற்றத்தையும் சித்தரித்து அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.  திமுகவை  கொள்கை, செயல்பாட்டின் அடிப்படையில் எதிர்கொள்ள முடியாமல், அது இந்துக்களுக்கு விரோதமான கட்சி என்று பிரச்சாரம் செய்வதும் கூட அந்தத் தந்திரத்தினால்தான்.

ஆனால்  சிறுபான்மையினர் தாங்கள் வாழ்வதற்கான சூழலை உறுதிப்படுத்த, அவர்களுடைய குரலும் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்றும் கேட்கிறார்கள். அந்த கோரிக்கை மறுக்கப்படும்போது ஜனநாயகம் பெரும்பான்மைவாதமாக மாறிவிடும்.

தேர்தல் திருவிழா தொடங்கிவிட்டது. மக்கள் மனநிலை எப்படியிருக்கிறது?

ஒவ்வொரு மாநிலமும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலை தங்களது கோணத்தில் பார்க்கின்றன.  குஜராத்திகள் அவர்கள் நலன் சார்ந்தும், வங்க வாக்காளர்கள் அவர்கள் நலன் சார்ந்தும், ஆந்திர மக்கள் அம்மாநில உரிமை சார்ந்தும் இந்த தேர்தலை அணுகுகிறார்கள். தமிழகத்தில் பழனிசாமியும் பன்னீர்செல்வமும் புல்வாமா தாக்குதல் அடிப்படையில் தேர்தலைப் பார்க்கச் சொல்கிறார்கள்.

இவர்கள் மாநில உரிமைகள் அனைத்தையும் தேர்தல் அறிக்கை என்ற பெயரில் மத்திய அரசுக்கு அடிமை சாசனமாக எழுதிக்கொடுத்துவிட்டு, நாட்டின் பாதுகாப்பு கருதி மோடிக்கு வாக்களியுங்கள் என்கிறார்கள்.  திமுகவின் தேர்தல் அறிக்கையோ தமிழகத்தின் உரிமைப் பிரகடனமாகவும், மத்தியில் ஆட்சி அமைந்தால் அதில் நாங்களும் இருப்போம், சொன்னதைச் செய்வோம் என்று கம்பீரமாகச் சொல்லும் அறிக்கையாகவும் இருக்கிறது.

மு.க.ஸ்டாலினின் பெரம்பலூர் பிரச்சாரக் கூட்டத்தில் நானும் பங்கேற்றேன். அப்போது எனக்கு வந்த கூட்டம் பேச்சை கேட்க வருகிற ஆர்வத்தைத் தாண்டி மக்கள் மத்தியில் ஆரவாரமும், எழுச்சியும் மோடி, பழனிசாமி, பன்னீர்செல்வத்துக்கு எதிரான அலை தமிழ்நாட்டில் வீசுவதை உணர்த்தியது”

என அந்த பேட்டியில் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.

THANX ; THE HINDU