எஸ்.எஸ். சிவசங்கர்
எஸ்.எஸ். சிவசங்கர்

குன்னம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏவான  எஸ்.எஸ். சிவசங்கர் தனது முகநூல் பக்கத்தில் சுவாரஸ்யமாக எழுதக்கூடியவர். கட்சி வேறுபாடின்றி  அவரது எழுத்துக்கு ரசிகர்கள்  உண்டு.  நாஞ்சில் சம்பத் நீக்கப்பட்டது குறித்து, நகைச்சுவையாக சிவசங்கர் எழுதிய பதிவு:
 
நாஞ்சில் சம்பத்
நாஞ்சில் சம்பத்

“நான் கேட்கிறேன், என் கட்சிக்காரர் அப்படி என்ன தவறு செய்தார் ?”.
அப்புடி என்ன தாங்க தப்பு பண்ணாரு?. அம்மா நெனச்சத சொன்னாரு நம்ம அண்ணன் நாஞ்சில் சம்பத்து. அதுல்ல என்ன தப்பு?. இப்பவா சொன்னாரு? அப்பவே சொல்லிட்டாரு. அதுக்கு இப்படியா?
” எறும்புகள் சாகிறது என்பதற்காக யானை நடக்காமல் இருக்க முடியுமா ?”. இந்த பதிலில் என்ன தப்பு கண்டு பிடிச்சீங்க?. மக்களை எறும்புன்னு சொன்னது தப்பா?. அவங்களை யானைன்னு சொன்னது தப்பா?

இது போல பதிலை இப்பவா சொன்னாரு அண்ணன் சம்பத்து. “ஏன் பேருந்துகளை ஓட்டாமல் நிறுத்தி வச்சிருக்கீங்க?”அப்படின்னு பாண்டே கேட்டப்போ, “அம்மா வரட்டும்னு காத்திருக்கோம்”னு தெளிவா சொன்னாரே, அங்கயே கரெக்டா தான் சொன்னாரு.
அதுல்லயும் “இது எங்க ஆட்சி. அம்மா வந்து தொடங்கட்டும்நு காதிருக்கோம். இதனால என்ன குடியா முழுகிப் போச்சு”, அப்படின்னு நெத்தியடியா சொன்னாரே, அப்ப நீக்கி இருந்தா நியாயம்.
அதக் கேட்டு அப்பவே நீக்காம, அப்ப சந்தோஷப் பட்டீங்களே அது நியாயமா? அப்ப உங்க கை ஓங்கி இருந்துது. இப்ப நெலம சரி இல்ல, அதனால நீக்குறீங்க. இது ஒரு தலைவருக்கு அழகா?
“வெள்ள காலத்துல 500 பேரு இறந்துருக்காங்க. ஏன் அதற்காக ஒரு தீர்மானம் நிறைவேற்றவில்லை?”இது பாண்டேவின் கேள்வி. அண்ணன் சம்பத்தின் பதில்,”தேவை இல்லை. நிறைவேற்றவில்லை”.
மிக சிறப்பான பதில். இதில் உண்மையை தவிர எதுவும் இல்லை. தீர்மானம் நிறைவேற்றவில்லை என்பது நிஜம். நிறைவேற்றாததற்கான காரணம் வேற என்ன இருக்க முடியும் ?
“சாவு வீட்டுக்காக கல்யாணங்கள் நடக்காமலா இருக்கிறது” என்பது போன்ற வரலாற்று சிறப்பு மிக்க பதில்களை அண்ணன் சம்பத் அளித்திருக்கிறார். இது ஜெயலலிதாவே சொன்ன பதில் போலத் தான் இருக்கிறது.
தான் இது போல பதில் சொல்லி விடுவோமோ என்பதால் தான் ஜெயலலிதா பத்திரிக்கையாளர்களை சந்திப்பதில்லை. ஏற்கனவே ஒரு முறை ஆங்கில பத்திரிக்கையாளர் கரன் தாபருக்கு பேட்டி கொடுத்த போது காட்டிய மறுமுகம் இங்கு சம்பத் மூலமாக வெளிப்பட்டிருக்கிறது.
அவ்வளவு தான். அவ்வளவே தான். இன்றைய பேட்டிக்கு ஜெயலலிதாவை கூப்பிட்டிருந்தால் இதை விட கடுமையான பதில் தான் வந்திருக்கும். இல்லை என்றால் பாண்டே தாக்கப்பட்டிருப்பார்.
‪#‎உண்மையை‬ உரக்க சொன்ன சம்பத் !