aa

நாளை மறுநாள் நடிகர் சங்க தேர்தல் நடக்கும் நிலையில், சரத் – நாசர் தரப்பினர் அனல் கக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று கோடம்பாக்கத்தில் சரத்குமார் அணியினரும், கே.கே.நகரில் விஷால் அணியினரும், திரைப்பட நடிகர்கள் மத்தியில் பிரச்சார கூட்டங்களை நடத்தினர்.
கோடம்பாக்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நடிகர் ராதாரவி பேசும்போது, “என் அப்பா எம்.ஆர்.ராதா நடிகர் சங்கத்துக்காக நெறைய பணிகள் செஞ்சிருக்கார். ஆனா எஸ்.வி.சேகருக்கு நடிகர் சங்கத்தின் வரலாறு தெரியலை.

இப்போ ஒரு பூச்சிதான் தொல்லை கொடுத்துகிட்டிருக்கு. நம்ம சட்டையில பூச்சி இருந்தா தட்டி விடுவோம். அதே பூச்சி கழுத்தில் உட்ந்து கடிச்சா நசுக்கத்தானே செய்வோம்.      அதே மாதிரி ஒரு மோசமான பூச்சி எனது பேண்ட்டுக்குள்ளே நுழைஞ்சு கடிச்சா என்ன செய்யறது… இங்கே என் பேண்ட்டை கழற்ற முடியாது. இங்கிருந்து வெளியே போனதும் அந்தப் பூச்சியைப் பிடித்து, நீதானே கடிச்சேனு சொல்லி அப்படியே நசுக்கிடுவேன்.

எலக்சன் முடியற 18-ம் தேதி ராத்திரி எல்லாரையும் நசுக்கிடுவேன்” என்றார்.

நடிகர் சங்க கட்டட விவகாரத்தில் தில்லுமுல்லு நடந்ததாக கூறி வழக்கு தொடர்ந்த பூச்சி முருகன் என்ற நடிகரை குறிப்பிட்டே இப்படி பேசினார்.

மேலும், “நடிகர் கமலகாசனை பற்றி பற்றி விமர்சிக்கலாமானு சிலபேரு கேக்குறான். . கமல் என்ன சினிமாவுக்கு அல்டிமேட்டா?  கமலும், நானும் அரை டிரவுசர் காலத்திலேயே ப்ரண்டஸ். ரெண்டு பேரும் மாறி மாறி கெட்டவார்த்தையில் ஒருத்தரை ஒருத்தர் திட்டிக்குவோம்” என்றார்.

சமீபத்தில், நடிகர் கார்த்தி, “கமல்ஹாசனை விமர்சிக்க யாருக்கும் உரிமை கிடையாது” என்று பேசியது குறிப்பிடத்தக்கது.

தவிர தனது பேச்சில் எல்லை மீறி ராதாரவி பேசினார்.  அவரது  பேச்சை, கூட்டத்தில் இருந்த அவரது தங்கை முறையான நடிகை ராதிகா ரசித்து சிரித்தபடியே கேட்டுக்கொண்டிருந்தார்.

ராதாரவியின் பேச்சு நேரலையாக சில தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.